Sunday, 6 March 2016

ஆசியா கோப்பை -2016

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
ஆசிய கோப்பையை இந்தியா வெல்வது இது 6-ஆவது முறையாகும். இதன்மூலம் ஆசிய கோப்பையை அதிகமுறை வென்ற அணி என்ற பெருமையும் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.
1984 முதல் நடைபெற்று வரும் இந்தப் போட்டி 2014 வரை ஒரு நாள் கிரிக்கெட் போட்டியாக நடத்தப்பட்டு வந்த நிலையில், இந்த முறை டி20 போட்டியாக நடத்தப்பட்டது. இதில் வென்றதன் மூலம் ஆசிய கோப்பை டி20 போட்டியில் வென்ற முதல் அணி என்ற பெருமையும் இந்தியாவுக்கு கிடைத்தது.
மழை காரணமாக 15 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த வங்கதேசம் 5 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் சேர்த்தது. பின்னர் ஆடிய இந்தியா 13.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.
வங்கதேச தலைநகர் டாக்காவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டம் மழை காரணமாக சுமார் 2 மணி நேரம் தாமதமாகத் தொடங்கியது. இதையடுத்து ஆட்டம் 15 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது.
மகமதுல்லா அதிரடி: டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட் செய்த வங்கதேச அணியில் தொடக்க வீரர்களான தமிம் இக்பால் 13, செளம்ய சர்க்கார் 14, பின்னர் வந்த ஷகிப் அல்ஹசன் 21, முஷ்பிகுர் ரஹிம் 4, கேப்டன் மோர்ட்டஸா 0 என அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் 12 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 78 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது வங்கதேசம்.
இதன்பிறகு மகமதுல்லா களம்புகுந்தார். சபீர் ரஹ்மான் நிதானமாக ரன் சேர்க்க, மகமதுல்லா வெளுத்து வாங்கினார். பாண்டியா வீசிய 14-ஆவது ஓவரில் ஒரு பவுண்டரியையும், இரு சிக்ஸரையும் பறக்கவிட்டார் மகமதுல்லா.
இறுதியில் 15 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் குவித்தது வங்கதேசம். மகமதுல்லா 13 பந்துகளில் 33 ரன்களும், சபீர் ரஹ்மான் 29 பந்துகளில் 32 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். கடைசி 3 ஓவர்களில் வங்கதேசம் 42 ரன்கள் குவித்தது. இந்தியத் தரப்பில் அஸ்வின், நெஹ்ரா, பூம்ரா, ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
ஷிகர் தவன் 60: பின்னர் ஆடிய இந்திய அணியில் ரோஹித் சர்மா 1 ரன்னில் வெளியேற, ஷிகர் தவனுடன் இணைந்தார் விராட் கோலி. அசத்தலாக ஆடிய இந்த ஜோடி 11.1 ஓவர்களில் 94 ரன்கள் குவித்தது. 35 பந்துகளில் அரைசதம் கண்ட ஷிகர் தவன், 44 பந்துகளில் 1 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 60 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து கேப்டன் தோனி களமிறங்கினார். கடைசி 2 ஓவர்களில் இந்தியாவின் வெற்றிக்கு 19 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. அல்-அமீன் வீசிய 14-ஆவது ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர், 4-ஆவது பந்தில் பவுண்டரியை விளாசிய தோனி, அடுத்த பந்தில் மற்றொரு சிக்ஸரை விளாச, இந்தியா 13.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.
விராட் கோலி 28 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 41, தோனி 6 பந்துகளில் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ஷிகர் தவன் ஆட்டநாயகனாகவும், 5 ஆட்டங்களில் 176 ரன்கள் குவித்த சபீர் ரஹ்மான், தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

No comments:

Post a Comment